மும்பை: வீடு வீடாகச் சென்று கரோனா தடுப்பூசி போடுவது என்பது சாத்தியமில்லாதது என்று மும்பை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
மும்பை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொது நலன் வழக்கில், மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத் துறை தாக்கல் செய்த பதில் மனுவில் இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள், படுக்கையில் இருக்கும் நோயாளிகள் அல்லது இருசக்கர நாற்காலியில் இருப்போருக்கு அவர்களது வீடுகளுக்கே சென்று கரோனா தடுப்பூசி போட உத்தரவிடக் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் பொது நலன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆனால், தடுப்பூசி மருந்துகள் வைக்கப்பட்டிருக்கும் பெட்டகங்களை வீடு வீடாக எடுத்துச் செல்வது, தடுப்பூசி மருந்துகளை நெடுந்தொலைவுக்கு எடுத்துச் செல்வது போன்றவை சிக்கல்களை ஏற்படுத்தும் என்பது உள்ளிட்ட பல காரணிகளை மத்திய அரசு பட்டியலிட்டு, வீடு வீடாகச் சென்று கரோனா தடுப்பூசி போடுவது சாத்தியமில்லை என்று பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளது.