கரோனா பேரிடரின் மத்தியிலும் வெளிநாடுகளுக்கு ஆக்சிஜன் ஏற்றுமதியை மத்திய அரசு இரட்டிப்பாக்கியது தெரிய வந்துள்ளது.
நாடு முழுவதும் கரோனா தொற்று 2ஆம் அலையின் காரணமாக பல்வேறு தரப்பினரும் தொற்று பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். தொற்று பாதித்தவர்களுக்கு மூச்சுத்திணறல் பிரச்னை ஏற்படுவது அதிகரித்துள்ளதால் உடனடியாக சிகிச்சைக்குத் தேவையான ஆக்சிஜன் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக தில்லி, மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையினால் நோயாளிகள் சிகிச்சை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கரோனா பேரிடர் மத்தியிலும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஆக்சிஜனின் அளவு இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது சமீபத்திய அறிக்கையில் வெளிவந்துள்ளது.
2019-20ஆம் நிதியாண்டில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட ஆக்சிஜனின் அளவு 4502 மெட்ரிக் டன்னாக இருந்த நிலையில் 2020-21ஆம் நிதியாண்டில் 9300 மெட்ரிக் டன்னாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் மத்திய அரசின் செயல்பாடு பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
எனினும் மருத்துவ தேவைக்கான ஆக்சிஜன் ஏற்றுமதியில் மத்திய அரசு எத்தகைய மாறுதல்களையும் மேற்கொள்ளவில்லை எனத் தெரிவித்துள்ள மத்திய செய்திதொடர்புத் துறை தொழில்துறைக்கான ஆக்சிஜன் ஏற்றுமதி தான் உயர்த்தப்பட்டதாக விளக்கமளித்துள்ளது.