கேரளத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாகவே தடுப்பூசி வழங்கப்படும் என அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கேரளத்தில் இன்று (புதன்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் இதுபற்றி கூறியது:
"மாநிலத்தில் புதிதாக 22,414 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 22 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். 5,431 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தடுப்பூசிகளை வாங்கிக்கொள்ளுமாறு மாநில அரசுகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால், கரோனாவால் மாநிலங்கள் ஏற்கெனவே நிதிச் சுமையில் உள்ளன. மாநிலங்களை மேலும் பொருளாதார நெருக்கடிக்குத் தள்ளிவிடாமல் மத்திய அரசே மாநிலங்களுக்கு தடுப்பூசிகளை இலவசமாக வழங்க வேண்டும்.
18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கேரள அரசு இலவசமாகவே தடுப்பூசியை வழங்கும்."
கரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு பினராயி விஜயன் ஏற்கெனவே கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.