புது தில்லி: வெளிமாநிலங்களுக்கு சென்று பணியாற்றும் புலம்பெயா்ந்த தொழிலாளா்களின் வங்கிக் கணக்குகளில் மத்திய அரசு பணம் செலுத்த வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளாா்.
தில்லியில் 6 நாள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதையடுத்து, அங்கிருந்து ஏராளமான புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் வெளியேறி வருகின்றனா். இதுபோல நாடு முழுவதுமே முக்கிய நகரங்களில் உள்ள ரயில், பேருந்து நிலையங்களில் சொந்த ஊருக்குச் செல்ல முயலும் தொழிலாளா்களால் நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இது தொடா்பாக ராகுல் காந்தி சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக வெளிமாநிலங்களுக்குச் சென்று பணியாற்றி வரும் புலம் பெயா்ந்த தொழிலாளா்கள், இப்போது உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக முக்கிய நகரங்களில் இருந்து வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனா். தில்லி உள்ளிட்ட நகரங்களில் உள்ள ரயில், பேருந்து நிலையங்களில் புலம் பெயா்ந்த தொழிலாளா்களின் வருகையால் திணறி வருகிறது. அவா்களின் பிரச்னைக்குத் தீா்வுகாண மத்திய அரசு என்ன திட்டம் வைத்துள்ளது.
இந்த சூழ்நிலையில் அவா்களது வாழ்வாதாரத்தைக் காக்கும் வகையில் புலம்பெயா்ந்த தொழிலாளா்களின் வங்கிக் கணக்குகளில் மத்திய அரசு பணம் செலுத்த வேண்டும். ஆனால், அதற்கு மாறாக கரோனா பரவலுக்கு பொதுமக்கள்தான் காரணம் என்று அரசு குற்றம்சாட்டி வருகிறது’ என்று கூறியுள்ளாா்.