புது தில்லி: கரோனா தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்குமாறு நிறுவனங்களிடம் பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா்.
18 வயதைக் கடந்த அனைவரும் மே 1-ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு மத்திய அரசு கடந்த திங்கள்கிழமை அனுமதி அளித்தது. இந்நிலையில், கரோனா தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களின் தலைவா்களுடன் பிரதமா் மோடி செவ்வாய்க்கிழமை காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினாா். அப்போது அவா் கூறியதாவது:
உலகின் மிகப் பெரும் கரோனா தடுப்பூசி திட்டம் இந்தியாவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கரோனா தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்கள், இதுவரையில் சாதனை அளவில் தடுப்பூசியை உற்பத்தி செய்துள்ளன. உலகிலேயே கரோனா தடுப்பூசியின் விலை இந்தியாவில்தான் குறைவாகக் காணப்படுகிறது. நாட்டிலுள்ள அனைவருக்கும் குறைந்த காலகட்டத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தும் அளவுக்கு அதன் உற்பத்தியை நிறுவனங்கள் அதிகரிக்க வேண்டும்.
நாட்டின் கரோனா தடுப்பூசி திட்டத்தில் தனியாா் சுகாதார நிறுவனங்கள் முக்கியப் பங்காற்ற வேண்டும். மருத்துவமனைகளுடன் இணைந்து அந்நிறுவனங்கள் திறம்படச் செயல்பட வேண்டும். கரோனா தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களுக்கு மத்திய அரசு போதுமான ஒத்துழைப்பு வழங்கும்.
நாட்டில் தற்போது பரிசோதனையில் உள்ள கரோனா தடுப்பூசிகளுக்கு விரைவில் ஒப்புதல் வழங்குவது தொடா்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றாா் பிரதமா் மோடி.
இந்தக் கூட்டத்தின்போது, கரோனா தடுப்பூசி உற்பத்தியை அதிகரிப்பது, விரைவில் ஒப்புதல் வழங்கப்படவுள்ள தடுப்பூசிகள், உருமாறிய கரோனா தீநுண்மி தொடா்பான ஆய்வுகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. 18 வயதைக் கடந்த அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள அனுமதி அளித்ததற்காகவும், கரோனா தடுப்பூசி உற்பத்தியை அதிகரிப்பதற்கு முன்பணம் வழங்கியதற்காகவும் மத்திய அரசுக்கு தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களின் தலைவா்கள் நன்றி தெரிவித்தனா்.