புதிய கரோனா பாதிப்புகள்: 10 மாநிலங்களிலிருந்து மட்டும் 76 சதவிகிதம்
நாடு முழுவதும் புதிதாக 2,95,041 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் புதன்கிழமை அறிவித்தது.
இதில் 76 சதவிகிதத்தினர் 10 மாநிலங்களைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.
அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் தினசரி பாதிப்பு 62,097 ஆக பதிவாகியுள்ளது. இதற்கு அடுத்தபடியாக உத்தரப் பிரதேசத்தில் 29,574 பேருக்கும், தில்லியில் 28,395 பேருக்கும் நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த 10 மாநிலங்களில் கர்நாடகம், குஜராத், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், கேரளம் மற்றும் தமிழகம் ஆகிய மாநிலங்களும் உள்ளன.
நாட்டில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 21,57,538 ஆக உயர்ந்துள்ளது. இது மொத்த பாதிப்பில் 13.82 சதவிகிதம்.
24 மணி நேரத்தில் மேலும் 2,023 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். இதில் 82.6 சதவிகிதம் பேர் 10 மாநிலங்களில் மட்டும் பலியாகியுள்ளனர்.