வெளிநாடுகளில் இருந்து ஆக்சிஜன் இறக்குமதி செய்யும் மத்திய அரசின் செயல்பாடு வெட்கக்கேடான ஒன்று என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. குறிப்பாக தில்லி, மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் ஆக்சிஜன் சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து உடனடியாக அவற்றை வழங்க மாநில அரசுகள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து 50000 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜனை இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் விமர்சனம் தெரிவித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தனது சுட்டுரைப் பதிவில், “ஆக்சிஜன் இறக்குமதி செய்யும் மத்திய அரசின் முடிவு வெட்கக்கேடானது. உலகிலேயே அதிகளவு ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் நிலையில் சொந்த நாட்டு மக்களுக்கு ஆக்சிஜன் வழங்க முடியாமல் இறக்குமதி செய்கிறது அரசு. கரோனா பேரிடரின் மத்தியிலும் கூட எதற்காக ஆக்சிஜன் ஏற்றுமதியை இரட்டிப்பாக்கியது அரசு?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.