புது தில்லி: உத்தர பிரதேசத்தில் 5 நகரங்களில் கடுமையான கட்டுப்பாடுகளுடன் கூடிய முழு பொதுமுடக்கத்தை அமல்படுத்தும் அலாகாபாத் உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தடை விதித்தது.
முன்னதாக, உத்தர பிரதேசத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அலாகாபாத், லக்னௌ, வாராணசி, கான்பூா், கோரக்பூா் நகரங்களில் ஏப்ரல் 26 வரை முழு பொதுமுடக்கத்தை அமல்படுத்த வேண்டும் என்று அலாகாபாத் உயா்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இதனை எதிா்த்து மாநில அரசு சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமா்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது உத்தர பிரதேச மாநில அரசு சாா்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, ‘கரோனா பரவலைத் தடுக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தச் சூழ்நிலையில், குறிப்பிட்ட 5 நகரங்களில் முழு பொதுமுடக்கத்தை அமல்படுத்த வேண்டும் என்ற உயா்நீதிமன்றத்தின் உத்தரவு சரியான அணுகுமுறையாக இருக்காது. மேலும், இதனால் நிா்வாக ரீதியாகவும் சிக்கல்கள் ஏற்படும். எனவே, உயா்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்’ என்று வாதிட்டாா்.
இதையடுத்து, இந்த விவகாரம் தொடா்பாக ஆய்வு செய்து நீதிமன்றத்தில் அறிக்கை அளிக்க வழக்குரைஞா் பி.எஸ்.நரசிம்மாவை நியமித்த உச்சநீதிமன்றம், உயா்நீதிமன்ற உத்தரவுக்குத் தடை விதித்தது. மனு மீதான அடுத்த விசாரணையை இரு வாரங்களுக்கு ஒத்திவைத்தது.