கரோனா தடுப்பூசி விவகாரத்தில் நாட்டு மக்களுக்கு முக்கியத்துவம் அளிக்காதது ஏன் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த அவர், ''கடந்த 6 மாதங்களில் மட்டும் 1.1 மில்லியன் ரெம்டெசிவிர் மருந்துகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இன்று ரெம்டெசிவிர் மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதேபோன்று ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் 6 கோடி கரோனா தடுப்பு மருந்துகளை மத்திய அரசு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. அந்த காலகட்டத்தில் 3 - 4 கோடி இந்திய மக்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.
இவ்வாறு தொடர் நடவடிக்கைகள் மூலம் இந்திய மக்களுக்கு பாஜக அரசு முக்கியத்துவம் அளிக்காதது ஏன்?'' என்று பிரதமர் மோடிக்கு பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.