புது தில்லி: நாட்டில் வரும் வாரங்களில் கரோனாவின் கோரத்தாண்டவம் மிக மோசமாக இருக்கும். அதனை எதிர்கொள்ள நாம் தயாராக வேண்டும் என்று தில்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு பதிலளித்துள்ளது.
மக்களை அச்சப்படுத்துவதற்காக இதனைக் கூறவில்லை. இது தான் நிதர்சனமான உண்மையாக உள்ளது என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.
ஆக்ஸிஜன் தட்டுப்பாடு தொடர்பான வழக்கில், தில்லி உயர் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையில் மத்திய அரசு தரப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனாவால் நாட்டில் மிக மோசமான சூழல் உருவாகவிருக்கிறது. வரும் நாள்களில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை கடுமையாக உயரும். மக்கள் அதனை எதிர்கொள்ளத் தயாராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாள்தோறும் நாட்டில் கரோனா தொற்று உறுதி செய்யப்படும் எண்ணிக்கை கடுமையாக உயர்ந்து தற்போது 24 மணி நேரத்துக்கு 3 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு வருகிறது. பலி எண்ணிக்கையும் கடுமையாக உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், வரும் வாரங்களில் மேலும் பாதிப்பு அதிகரிக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.