தில்லி சரோஜ் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் மருத்துவமனையிலிருந்து வெளியேற்றப்படுகின்றனர்.
தலைநகர் தில்லியில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கடுமையான ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சரோஜ் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் இருப்பு இல்லாததால் பழைய நோயாளிகள் மருத்துவமனையிலிருந்து வெளியேற்றப்படுகின்றனர். அதேசமயம், புதிய நோயாளிகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி சரோஜ் மருத்துவமனையில் கரோனா நோய்த் தொற்றுப் பிரிவுக்கான பொறுப்பாளர் கூறுகையில்,
"ஆக்ஸிஜன் கையிருப்புக்கான விநியோகம் இன்னும் பெறப்படவில்லை. எங்களிடம் 70 நோயாளிகள் உள்ளனர். அவர்கள் மோசமான நிலையில் உள்ளனர். ஆக்ஸிஜன் தேவை உள்ளது. ஆக்ஸிஜன் விநியோகிக்கப்படவில்லை என்றால் மிகப் பெரிய பேரழிவு ஏற்பட்டுவிடும். நோயாளிகளை மருத்துவமனையிலிருந்து வெளியேற்றும் பணியை நாங்கள் தொடங்கியுள்ளோம்" என்றார்.
வெள்ளிக்கிழமை நிலவரப்படி தில்லியில் 92,029 பேர் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.