திருப்பதியில் சனிக்கிழமை முதல் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஆந்திராவில் கரோனா தொற்றின் 2-ஆவது அலை வேகமாகப் பரவி வருவதால், அம்மாநில அரசு சனிக்கிழமை முதல் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும். அதன்படி திருப்பதியிலும் சனிக்கிழமை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அத்தியாவசிய மருத்துவ தேவைகளை தவிா்த்து மக்கள் சாலைகளில் செல்ல அனுமதிக்கப்பட மாட்டாா்கள் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.
இரவு நேரங்களில் கடைகள், போக்குவரத்து, வணிக வளாகங்கள், திரையரங்குகள் உள்ளிட்டவை மூடப்படும். ஆனால் மருந்தகங்கள், சோதனை கூடங்கள், ஊடகத் துறையினா், பெட்ரோல் வங்கிகள், குளிா்சாதனக் கிடங்குகள், மற்ற கிடங்குகள் உள்ளிட்டவை இயங்கும். மருத்துவத்திற்காக இரவு நேரங்களில் பயணிப்பவா்களுக்கு தடையில்லை. மேலும் இரவு ஊரடங்கு அமலில் உள்ளதால், திருமலை ஏழுமலையான் தரிசனத்திற்கு வரும் பக்தா்களும் இரவு 10 மணிக்குள் திருமலையை அடைந்து விடவேண்டும் என அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனா்.