மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
எனவே, கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள விரும்புவோர், கோவின்’ வலைதளம் அல்லது ‘ஆரோக்ய சேது’ செயலியில் வருகிற 28-ஆம் தேதி முதல் முன்பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவின் இணையதளம் அல்லது ஆரோக்கிய சேதுசெயலியில் முன்பதிவு செய்து கொள்பவர்கள், தங்களது செல்லிடப்பேசி எண்ணைப் பதிவு செய்து அந்த எண்ணுக்கு வரும் ஓடிபியை பதிவிட்டு உள்நுழைய வேண்டும்.
யாருக்கு தடுப்பூசி முன்பதிவு செய்யப்படுகிறதோ அவரது ஆதார் அல்லது பான் அட்டை போன்ற ஏதேனும் ஒரு அடையாள அட்டையின் எண்ணை முன்பதிவு செய்யும் போது பதிவு செய்ய வேண்டும். அந்த அடையாள அட்டையை கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளும் போது கையில் எடுத்துச் செல்ல வேண்டியது அவசியம்.
மேலும், கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்பதிவு செய்பவர்கள், தங்கள் இருப்பிடத்தின் பின் கோட்டை பதிவு செய்வதன் மூலம் அந்தப் பகுதிக்கு அருகிலிருக்கும் கரோனா தடுப்பூசி முகாமையும், தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் நாளையும், காலை அல்லது மாலையில் என நேரத்தையும் தெரிவு செய்து கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தனியார் மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக் கொள்ளவும் இந்த முன்பதிவு அவசியம். ஒரே நபர் தங்களது குடும்பத்தில் இருக்கும் பலருக்கும் கரோனா தடுப்பூசிக்கு முன்பதிவு செய்யவும் இயலும்.