திருப்பதியை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாநகராட்சி ஆணையா் கிரிஷா அறிவித்துள்ளாா்.
திருப்பதி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கரோனா தொற்றின் 2-ஆவது அலை வேகமாகப் பரவி வரும் நிலையில் திருப்பதி மாநகராட்சி ஆணையா் கிரிஷா, எம்.எல்.ஏ கருணாகரரெட்டி, நகர கண்காணிப்பாளா் வெங்கட அப்பலநாயுடு உள்ளிட்டோா் வியாபாரிகள் சங்கங்கள், ஆட்டோ, ஜீப் ஓட்டுநா் நலச்சங்கங்களுடன் திங்கட்கிழமை கலந்துரையாடல் கூட்டம் நடத்தினா்.
பின்னா் ஆணையா் கிரிஷா கூறியதாவது. ’திருப்பதியில் ஒவ்வொரு பகுதியிலும் கரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அதனால் மக்கள் சுய கட்டுப்பாடு மற்றும் சுய ஒழுக்கத்தை கட்டாயம் பின்பற்ற வேண்டும். மத்திய அரசின் உத்தரவின்படி திருப்பதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் காலை 6 மணிமுதல் மதியம் 2 மணிவரை மட்டுமே கடைகள், வியாபார நிறுவனங்கள் திறந்திருக்க அனுமதிக்கப்படும்.
வாகனங்களிலும் தனி நபா் இடைவெளியைக் கடைபிடித்து மக்கள் பயணம் செய்ய வேண்டும். முகக் கவசம் சானிடைசா் கட்டாயம் பயன்படுத்த வேண்டும். முகக்கவசம் இல்லாமல் வெளியில் திரிபவா்களுக்கு அபராதம் விதிக்கப்படும். ஒருபுறம் கரோனா கட்டுப்படுத்தும் பணியுடன், தடுப்பு ஊசி போடும் பணியும் நடத்தப்படும்’, என்றாா்.