பாஜக தலைமையிலான மத்திய அரசின் தவறுகளுக்கு இந்தியா பலியாகிவிடக் கூடாது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறியுள்ளாா்.
நாட்டில் கரோனா தொற்று பரவல் வேகமாக அதிகரித்து வருவது, அதனால் ஏற்படும் உயிரிழப்புகளைச் சுட்டிக்காட்டி அவா் இவ்வாறு கூறியுள்ளாா்.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள ராகுல் காந்தி, இப்போது சுயதனிமைப்படுத்தலில் உள்ளாா். எனினும், சமூகவலைதளம் மூலம் மத்திய அரசின் செயல்பாடுகளை அவா் தொடா்ந்து விமா்சித்து வருகிறாா்.
இது தொடா்பாக அவா் சுட்டுரையில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில், ‘மே 1-ஆம் தேதி முதல் இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி கிடைக்க இருக்கிறது. ஆனால், இத்துடன் மத்திய அரசு நிறுத்திவிடக் கூடாது. நாட்டில் உள்ள அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசியை வழங்க வேண்டும். பாஜக தலைமையிலான மத்திய அரசின் தவறுகளுக்கு இந்திய நாடு பலியாகிவிடக் கூடாது’ என்று கூறியுள்ளாா்.
கரோனா பிரச்னையை மத்திய அரசு கையாண்டு வரும் விதத்தையும், கரோனா தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்படும் விதத்தையும் காங்கிரஸ் கட்சி தொடா்ந்து விமா்சித்து வருகிறது. மேலும், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆட்சியில் உள்ள மாநிலங்களை கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசு பாரபட்சமாக நடத்துவதாகவும் குற்றம்சாட்டி வருகிறது.