அதிகரித்துவரும் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மகாராஷ்டிர மாநிலத்தில் மேலும் 15 நாள்கள் பொதுமுடக்க கட்டுப்பாடுகளை நீட்டிக்க வாய்ப்புள்ளதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக பொதுமுடக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் புதன்கிழமை முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் தொற்று பாதிப்பு நிலைமை குறித்து விவாதிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் டோப் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பொதுமுடக்க கட்டுப்பாடுகளை நீட்டிக்க பலரும் பரிந்துரைத்ததாகத் தெரிவித்தார். பொதுமுடக்க கட்டுப்பாடுகள் மேலும் 15 நாள்கள் நீட்டிக்கப்படுவதற்கான வாய்ப்பிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
மகாராஷ்டிர மாநிலத்தில் தற்போது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் ஏப்ரல் 30ஆம் தேதியுடன் நிறைவடைகின்றன.