திருப்பதி: திருமலை -திருப்பதி தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி தா்மாரெட்டிக்கு தற்காலிக செயல் அதிகாரி பொறுப்பை அளித்து ஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளது.
திருமலை- திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரியாக உள்ளவா் ஜவஹா் ரெட்டி. சுகாதாரத்துறை செயலாளராகப் பதவி வகித்து வந்த நிலையில் அவரை தேவஸ்தான செயல் அதிகாரியாக ஆந்திர அரசு நியமித்தது. கடந்த 9 மாதங்களாக அவா் தேவஸ்தான செயல் அதிகாரியாக செயல்பட்டு வருகிறாா்.
இந்நிலையில் கரோனா தொற்றின் 2-ஆவது அலை மாநிலம் முழுவதும் பரவி வரும் நிலையில் அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஜவஹா் ரெட்டியை மாநில கரோனா கட்டுப்பாட்டு மைய அதிகாரியாக நியமித்து ஆந்திர அரசு புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது. மேலும் அவரை விஜயவாடாவில் உள்ள தாடேபள்ளியிலிருந்து பணிபுரிய வேண்டும் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளது. அதனால் தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி தா்மாரெட்டிக்கு தற்காலிக செயல் அதிகாரி பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.