இன்று இரவு 7 மணிக்கு கருத்துக்கணிப்பு முடிவுகள்
வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் இன்று (வியாழக்கிழமை) இரவு 7 மணிக்குப் பிறகு வெளியாகவுள்ளன.
தமிழகம், கேரளம், புதுச்சேரி, அசாம் ஆகிய மாநிலங்களுக்கு கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரேகட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்றது. மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக நடைபெறும் தேர்தலில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று மாலை 6.30 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக வாக்குப்பதிவு நிறைவடைந்தவுடன் வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாவது வழக்கம். ஆனால், மேற்குவங்கத்தில் இன்றுதான் தேர்தல் நிறைவு பெறுவதால், முன்னதாக கருத்துக்கணிப்புகளை வெளியிட தேர்தல் ஆணையம் தடை வைத்திருந்தது.
எனவே, மேற்குவங்கத்தில் இன்று வாக்குப்பதிவு நிறைவடைந்த பின்னர் அதாவது இன்று இரவு 7 மணிக்குப் பிறகு வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி நடைபெறவுள்ளது.