தில்லியின் பிஜ்வாசன் பகுதியில் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்தில் நான்கு சிறுவர்கள் உள்பட ஒரே குடும்பத்தில் உள்ள 6 பேர் இன்று அதிகாலை உயிரிழந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
வால்மீகி காலனியில் 12.30 மணிக்கு இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. மின்மாற்றியில் ஏற்பட்ட தீ விபத்து, மளமளவென அருகில் உள்ள குடிசைகளுக்குப் பரவியதால், வீட்டில் உள்ள எரிவாயு சிலிண்டர் வெடித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு நான்கு தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன. சிலிண்டர் வெடிப்பில் உயிரிழந்தவர்கள் கமலேஷ் (37), அவரது மனைவி புதானி (32), அவர்களது இரண்டு மகள்கள், 16 மற்றும் 12, மற்றும் இரண்டு மகன்கள், 6 வயது மற்றும் 3 மாதங்கள் என மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தீயணைப்பு அதிகாரிகளும் காவல்துறையினரும் சடலங்களை மீட்டு, சப்தர்ஜங் மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் மேலும் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.