கரோனா பேரிடர் அதிகரித்தாலும் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் ராகேஷ் திக்காய்த் தெரிவித்துள்ளார்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லி எல்லைகளில் போராடி வரும் விவசாயிகளின் போராட்டம் 150 நாள்களைக் கடந்து நடந்து வருகிறது. தில்லி - ஹரியாணா மாநிலங்களுக்கு இடையே முக்கியமான எல்லைகள் தொடர்ந்து முடக்கப்பட்டுள்ளன. டிக்ரி, சிங்கு எல்லைகள் முழுவதும் அடைக்கப்பட்டுள்ளன.
தில்லியில் கரோனா தொற்று பரவல் கட்டுக்கடங்காமல் சென்றுவரும் நிலையில் விவசாயிகள் போராட்டம் குறித்த கேள்விகளுக்கு வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் கூட்டமைப்பின் தலைவர் ராகேஷ் திக்காய்த் பதிலளித்துள்ளார்.
அவர், “கரோனா அலை அதிகரித்தாலும் வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறும் வரை போராட்டங்களில் இருந்து பின்வாங்கப் போவதில்லை” என உறுதி தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், மத்திய அரசு விவசாயிகளின் குரலை நசுக்கப் பார்ப்பதாக குற்றம்சாட்டினார்.