கட்டுப்படுத்தமுடியாத கரோனா பரவல் காரணமாக ஹரியாணாவின் 9 மாவட்டங்களில் மே 3ஆம் தேதி வரை இரவுநேரப் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிகரித்து வரும் கரோனா தொற்று பரவல் காரணமாக பல்வேறு மாநில அரசுகளும் பகுதிநேரப் பொதுமுடக்கத்தை அறிவித்து செயல்படுத்தி வருகின்றன.
இந்நிலையில் ஹரியாணாவில் உள்ள பஞ்ச்குலா, குருகிராம், ஃபரிதாபாத், சோனிபட், ரோஹ்தக், கர்னல், ஹிசார், சிர்சா மற்றும் ஃபதேஹாபாத் ஆகிய மாவட்டங்களில் உயர்ந்துவரும் கரோனா தொற்று பரவலின் காரணமாக மே 3ஆம் தேதி வரை பகுதிநேரப் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை பொதுமுடக்கம் அமலில் இருக்கும் எனவும் வெள்ளிக்கிழமை முதல் இந்த நடைமுறை பின்பற்றப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ தேவைகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு பொதுமுடக்கத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.