அசாம் - மிசோரம் எல்லை பிரச்னை குறித்து பேச வட கிழக்கு மாநிலங்களை சேர்ந்த பாஜக எம்பிக்கள் குழு பிரதமர் மோடியை இன்று சந்தித்தனர்.
அசாம், மிசோரம் மாநிலங்களுக்கிடையே பதற்றம் நிலவிவரும் நிலையில், வடக் கிழக்கு மாநிலங்களவைச் சேர்ந்த பாஜக எம்பிக்கள் குழு பிரதமரை சந்தித்து இன்று பேசியது. அசாம், அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர், திரிபுரா ஆகிய மாநிலங்களை சேர்ந்த 12 எம்பிக்கள் இன்று நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறுகையில், "வடகிழக்கு மாநிலங்களின் மீது வைத்துள்ள அன்பு இயற்கையானது என பிரதமர் எம்பிக்களிடம் தெரிவித்தார்.
அரசியல் ரீதியாக அவர் இப்பிரச்னையை அணுகவில்லை. மக்களிடையே உணர்ச்சிகளை தூண்டும் விதமாகவும் தவறான கருத்துகளை பரப்பும் விதமாகவும் வெளிநாட்டவர் நடந்து கொள்கின்றனர்" என்றார்.
இதையும் படிக்க | தில்லியிலும் நிலைமை மாறுகிறது.. புதிதாக 85 பேருக்கு கரோனா
கூட்டத்தில் பங்கேற்ற எம்பிக்கள் பிரதமரிடம் மனு ஒன்றை அளித்தனர். அதில், "அசாம், மிசோரம் மாநில முதல்வர்கள் பிரச்னையை சுமூகமாக தீர்க்க விரும்புகின்றனர். கடந்த இரண்டு நாள்களில் நம்பிக்கை அளிக்கும் விதமாக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. ஆனால், காங்கிரஸ் வஞ்சகமாக நடந்து கொள்கிறது.
அசாம் - மிசோரம் பிரச்னையின் மூலம் நாடு முழுவதும் பிரச்னையை ஏற்படுத்த முயற்சிப்பவர்களுக்கு அவர்களின் செயல் நடக்காது என உணர்த்த வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.