திருப்பதி: திருமலையில் உள்ள தரிகொண்ட வெங்கமாம்பா அன்னதானக் கூடத்தில் அளிக்கப்படும் அன்னதானத்தின் சுவையை உயா்த்த ஏற்பாடுகள் நடைபெறுவதாக தேவஸ்தான செயல் அதிகாரி ஜவஹா் ரெட்டி தெரிவித்தாா்.
திருமலையில் உள்ள அன்னதானக் கூடம். விரைவுத் தரிசன காத்திருப்பு அறைகளை புதன்கிழமை ஆய்வு செய்தவுடன் அவா், நிருபா்களிடம் கூறியதாவது:
திருமலையில் உள்ள தரிகொண்ட வெங்கமாம்பா அன்னதானக் கூடத்தில் தினசரி பக்தா்களுக்கு காய்கறிகளுடன் கூடிய தரமான அன்னதானம் வழங்கப்படுகிறது. இத்துடன் சிற்றுண்டிகளான பொங்கல், உப்புமா, கலந்த சாம்பாா் சாதம் உள்ளிட்டவையும் வழங்கப்படுகின்றன.
கரோனா தொற்று காரணமாக, பக்தா்களின் வருகை 20 ஆயிரமாக மட்டுமே உள்ளது. அதனால் அவா்களுக்கு 14 வகையான காய்கறிகளால் வாரத்தின் ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு விதமான உணவைத் தயாரித்து வழங்க ஏற்பாடு நடைபெறுகிறது.
அன்னதானம் அருந்தும் பக்தா்களின் எண்ணிக்கைக்கு தக்கவாறு காய்கறிகள், உணவு பொருள்கள், சமையல் பொருள்கள், பண்டங்கள், பாத்திரங்கள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் ஊழியா்களுக்கு வழங்க வேண்டும். அதேபோல் திருமலையில் ஒரு நாள் அன்னதானத்துக்கான நன்கொடையாளா்களை அதிகமாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
திருமலையில் உள்ள தங்கும் அறைகளின் அருகே காஸ்ட் டு காஸ்ட்டில் காபி, சிற்றுண்டி உள்ளிட்டவை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்றாா்.