நாட்டில் கரோனா இரண்டாம் அலையின் தாக்கம் இன்னும் முடிவடையவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும், தமிழகம், கேரளம், ஹிமாசல பிரதேசம் உள்ளிட்ட எட்டு மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக மத்திய அரசு உயரதிகாரி கூறுகையில், ‘உலகம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகமாகத்தான் உள்ளது. நாள்தோறும் 4.7 லட்சம் போ் தொற்றால் உலகம் முழுவதும் பாதிக்கப்படுகிறாா்கள்.
இந்தியாவில் கரோனா இரண்டாம் அலை இன்னும் முடிவடையவில்லை.
ஆகஸ்ட் 2-ஆம் தேதியுடன் முடிவடைந்த ஒரு வார பாதிப்பு விகிதம், 12 மாநிலங்களில் உள்ள 44 மாவட்டங்களில் 10 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது.
கடந்த நான்கு வாரங்களில் கேரளம், மகாராஷ்டிரம், மணிப்பூா், அருணாசல பிரதேசம் உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் உள்ள 18 மாவட்டங்களில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கடந்த வாரம் இந்தியாவின் மொத்த பாதிப்பில் 49.85 சதவீதம் கேரளத்தில் மட்டும் பதிவாகி உள்ளது. கடந்த மே மாதம் செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசி டோஸ்களைவிட ஜூலை மாதத்தில் இரண்டு மடங்கு செலுத்தப்பட்டுள்ளது’ என்றாா்.