தில்லி கொடூரம்: நீதி விசாரணைக்கு முதல்வர் உத்தரவு

தில்லியில்  சிறுமியை பாலியல் வன்கொடுமைக்குட்படுத்தி கொலை செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இவ்விவகாரத்தில் நீதி விசாரணை நடத்த மாநில முதல்வர் அரவிந்த் கேஜரிவால் உத்தரவிட்டுள்ளார்.
அரவிந்த் கேஜரிவால்
அரவிந்த் கேஜரிவால்

தில்லியில் ஒன்பது வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்குட்படுத்தி கொலை செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இவ்விவகாரத்தில் நீதி விசாரணை நடத்த மாநில முதல்வர் அரவிந்த் கேஜரிவால் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 1ஆம் தேதி, தில்லி கன்டோன்மென்ட் பகுதியில் ஒன்பது வயது தலித் சிறுமி பாலியல் வன்கொடுமைக்குட்படுத்தி கொலை செய்யப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதுமட்டுமின்றி, சிறுமியில் உடல் வலுக்கட்டாயமாக தகனம் செய்யப்பட்டது.

நாடு முழுவதும் இச்சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திவரும் நிலையில், இதுகுறித்து நீதி விசாரணை நடத்த தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் உத்தரவிட்டுள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தாருகக்கு 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

சிறுமியின் குடும்பத்தாரை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய கேஜரிவால், "நமது குழந்தை திரும்பிவரப்போவதில்லை. அக்குடும்பத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி துரதிருஷ்டவசமானது. ஈடு செய்யமுடியாதது. ஆனால், அரசின் சார்பில் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும். இதுகுறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தில்லியில் சட்டம் மற்றும் ஒழுங்கை வலுப்படுத்த தேவை உள்ளது. இதில் நடவடிக்கை எடுக்க மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளேன். குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதை உறுதி செய்ய அரசு சிறந்த வழக்கறிஞர்களை நியமிக்கும" என்றார்.

இந்த விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்கக் கோரி சிறுமியின் பெற்றோர் உள்பட நூற்றுக்கணக்கானோர் தென்மேற்கு தில்லியில் உள்ள பழைய நங்கல் பகுதியில் போராட்டம் நடத்திவருகின்றனர். 

சம்பவம் நடைபெற்ற ஞாயிற்றுக்கிழமை மாலை, சிறுமி, தன் வீட்டுக்கு அருகே உள்ள மயானத்தின் கூலரிலிருந்து குடிநீர் எடுப்பதற்காக சென்றதாகவும் பல மணி நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை என்றும் பெற்றோர் கூறுகின்றனர்.

மாலை 6 மணி அளவில், மயானத்தின் பூசாரியும் அவருக்கு தெரிந்தவர்களும் சிறுமியின் தாயை அழைத்து சிறுமியின் உடலை காண்பித்துள்ளனர். குடிநீர் எடுக்கும்போது மின்சாரம் பாய்ந்து சிறுமி உயிரிழந்திவிட்டதாக அவர்கள் தெரிவித்தனர். 

தனது மகளின் உடலில் தீக்காயம் இருந்ததாகவும் முழங்கை மற்றும் உதடுகள் நீல நிறத்தில் இருந்ததாகவும் தாய் கூறியுள்ளார். அடுமட்டுமின்றி, இதுகுறித்து காவல்நிலையத்தில் கூற வேண்டாம் என பூசாரியும் அவரின் கூட்டாளிகளும் தாயிடம் கூறியுள்ளனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்தால் உடற்கூராய்வின்போது சிறுமியின் உடல் பாகங்கள் திருடப்பட்டுவிடும் என்றும் உடலை உடனடியாக தகனம் செய்ய வேண்டும் என்றும் தாயிடம் கூறியுள்ளனர். ஆனால், பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து, பூசாரி உள்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com