அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைக்க ராகுல் காந்தி முயற்சித்து வருவதாக மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஜூலை 19ல் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்த தொடர் தொடங்கிய நாள் முதலே, பெகாஸஸ் விவகாரத்தை விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நாடாளுமன்ற அவையை எதிர்க்கட்சிகள் அவமதிப்பதாக பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமை குற்றம்சாட்டினார்.
இதற்கு பதிலளித்த மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியது:
எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை நடத்தவிடாமல் அமளியில் ஈடுபடுவதாக சொல்கிறீர்கள். ஆனால், காங்கிரஸ் ஆட்சியின் போது இரண்டு முறை நாடாளுமன்ற தொடரை முடக்கிய உங்கள் தலைவர்கள், ஜனநாயகத்தை காப்பதற்காக செய்தோம் என்று கூறினார்கள்.
மேலும், ஏழை மக்களின் பிரச்னைகளில் ராகுல் காந்தி உறுதியாகவுள்ளார். அவர் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க முயற்சிக்கிறார். சுதந்திரம், அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தின் நலன் கருதி மாநில அரசியலை மறந்து ஒன்றிணைய கேட்டுக் கொண்டுள்ளார். பெகாஸஸ் மற்றும் பிற பிரச்னைகளை விவாதிக்க நாங்கள் விரும்புகிறோம் எனத் தெரிவித்தார்.