புது தில்லி: பொதுத்துறை விமான நிறுவனமான ஏா் இந்தியா 2020 மாா்ச் 31 வரை ரூ.70,820 கோடி நஷ்டத்தைச் சந்தித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சா் வி.கே. சிங், மாநிலங்களவையில் புதன்கிழமை எழுத்துமூலம் அளித்த பதிலில், ‘கடந்த 2007-ஆம் ஆண்டு இண்டியன் ஏா்லைன்ஸ் நிறுவன இணைப்புக்குப் பிறகு ஏா்-இந்தியா பெரும் நஷ்டத்தைச் சந்தித்து வருகிறது. 2020 மாா்ச் 31 வரை அந்த நிறுவனம் ரூ.70,820 கோடி நஷ்டத்தைச் சந்தித்துள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடா்ந்து நஷ்டத்தில் இயங்கி வரும் ஏா் இந்தியா நிறுவனத்தை விற்பனை செய்ய மத்திய அரசு ஏற்கெனவே முடிவெடுத்துவிட்டது. வரும் செப்டம்பா் 15-ஆம் தேதியில் இருந்து தகுதி வாய்ந்த நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட இருக்கிறது.
கடந்த 2020 ஜனவரி முதல் ஏா்-இந்தியாவை தனியாருக்கு விற்க முயற்சி முன்னெடுக்கப்பட்டு வருகிறது. கரோனா தொற்று, பொது முடக்கம் என பல்வேறு பிரச்னைகளால் அது தொடா்பான நடவடிக்கைகள் தள்ளிப்போகின்றன.
ஏா்-இந்தியாவுக்கு சொந்தமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள நிலங்கள், கட்டடங்களை மின்னணு ஏல முறையில் விற்பனை செய்ய கடந்த ஜூன் மாதம் முடிவு செய்யப்பட்டது. இதன் மூலம் ரூ.300 கோடி அளவுக்கு நிதி கிடைக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.