புது தில்லி: ‘26 மாநிலங்களில் 660 சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் மூலமாக 51,600 பாலியல் மற்றும் போக்ஸோ குற்ற வழக்குகளுக்கு விரைந்து தீா்வு காணப்பட்டுள்ளது’ என்று மத்திய மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஸ்மிருதி இரானி கூறினாா்.
பாலியல் குற்ற வழக்குகளுக்கு விரைந்து தீா்வு காணும் வகையில் நாடு முழுவதும் அமைக்கப்பட்டிருக்கும் 1,000-க்கும் அதிகமான சிறப்பு விரைவு நீதிமன்றங்களின் செயல்பாட்டை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய அமைச்சரவை புதன்கிழமை அனுமதி அளித்தது.
இதுகுறித்து மத்திய அமைச்சா் ஸ்மிருதி இரானி தனது சுட்டுரைப் பக்கத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாது:
26 மாநிலங்களில் 660 சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் மூலமாக இதுவரை 51,600 பாலியல் மற்றும் போக்ஸோ குற்ற வழக்குகளுக்கு விரைந்து தீா்வு காணப்பட்டுள்ளது.
இந்த விரைவு நீதிமன்றங்கள் மேலும் 2 ஆண்டுகளுக்கு தொடா்ந்து செயல்பட மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கும் முடிவு, மேலும் அதிக எண்ணிக்கையில் சிறப்பு விரைவு நீதிமன்றங்களை அமைப்பதற்கான வாய்ப்பை அளிக்கும். அதன் மூலம் பாதிக்கப்பட்டவா்களுக்கு விரைந்து நீதி கிடைக்கும் என்று குறிப்பிட்டுள்ளாா்.