புதுதில்லி: டோக்கியோ ஒலிம்பிக்ஸ் ஆடவர் ஹாக்கி போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று அசத்திய இந்திய அணிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் வியாழக்கிழமை வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஆடவர் ஹாக்கி அணிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கேவிந்த் சுட்டுரையில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "41 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக்ஸ் ஆடவர் ஹாக்கி போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியது இந்திய அணிக்கு வாழ்த்துகள் " என்று கூறினார்.
டோக்கியோ ஒலிம்பிக்ஸ் ஆடவர் ஹாக்கி போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று அசத்திய இந்திய அணி.
பிரதமர் நரேந்திர மோடி, இந்த வரலாற்று வெற்றி ஒவ்வொரு இந்தியரின் நினைவிலும் பொறிக்கப்படும் நாள். வெண்கலத்தை வீட்டிற்கு கொண்டு வந்த நமது தேசத்தின் ஆடவர் ஹாக்கி அணிக்கு வாழ்த்துகள். இந்த சாதனையின் மூலம், ஒட்டுமொத்த தேசத்தின், குறிப்பாக நமது இளைஞர்களின் கற்பனையை கைப்பற்றியுள்ளனர். நமது ஹாக்கி அணியால் தேசம் பெருமை கொள்கிறது என்று பிரதமர் மோடி தனது வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.
உள்துறை அமைச்சர் அமித் ஷா, " இந்திய ஹாக்கி அணிக்கு வாழ்த்துகள். டோக்கியோ ஒலிம்பிக்ஸ் 2020 இல் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை மற்றும் மகிழ்ச்சி. நீங்கள் ஒட்டுமொத்த தேசத்தையும் பெருமைப்படுத்தியுள்ளீர்கள். " என்று கூறியுள்ளார்.
அசாம் முதல்வர் பிஸ்வா சர்மா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "இந்த வெண்கலம் எங்கள் தங்கம்! எங்கள் ஹாக்கி ஆடவர் அணி டோக்கியோ ஒலிம்பிக்ஸ் 2020 இல் ஒரு அற்புதமான வெற்றியைப் பதிவு செய்துள்ளது. 41 ஆண்டுகளுக்குப் பிறகு பதக்கம் வென்று வரலாற்றை மாற்றி எழுதியுள்ளது!"
இதையும் படிக்க | ஆடவர் ஹாக்கி போட்டியில் வெண்கலம் வென்றது இந்தியா!
ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், "இந்திய ஆடவர் அணிக்கு வாழ்த்துகள். ஒலிம்பிக்ஸ் போடியில் ஹாக்கி அணி 41 வருடங்களுக்குப் பிறகு பெற்றுள்ள அற்புதமான வெற்றி. டோக்கியோ 2020 இன் இந்த வரலாற்று வெற்றி வரும் தலைமுறை விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும். எதிர்காலத்தில் பெறவிருக்கும் வெற்றிக்கும் அனைத்து வீரர்களுக்கும் நல்வாழ்த்துகள். " என்று கூறியுள்ளார்.
41 ஆண்டுகளுக்கு பிறகு ஒவ்வொரு இந்தியரின் கனவும் வியாழக்கிழமை நிறைவேறியது, ஆடவர் ஹாக்கி அணி ஜெர்மனியை 5-4 என்ற கணக்கில் வென்று வெண்கலப் பதக்கத்தை வென்றது.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: இந்திய ஹாக்கி வரலாற்றில் புதிய அத்தியாயம் தொடக்கம் என ஒலிம்பிக்ஸ் வெண்கலம் வென்ற இந்திய ஆடவர் ஹாக்கி அணிக்கு வாழ்த்து என ஸ்டாலின் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.