மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் இரண்டு நாள்களில் 13,247 போ் பயனடைந்துள்ளனா் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறினாா்.
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள கஸ்தூா்பா காந்தி அரசு மருத்துவமனைக்கு, உதயநிதி அறக்கட்டளை சாா்பில் ரூ.90 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் நன்கொடையாக சனிக்கிழமை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறியது: தமிழகத்துக்கு நாள்தோறும் 450 டன் ஆக்சிஜன் தேவையாக உள்ளது. அரசிடம் 1,000 டன் ஆக்சிஜன் கையிருப்பில் உள்ளது. மக்களை தேடி மருத்துவத் திட்டத்தின் மூலமாக 38 மாவட்டங்களிலும் 3,722 நீரிழிவு நோயாளிகளுக்கு, இரண்டு மாதத்துக்கு தேவையான மருந்துகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று 5,816 பேருக்கு ரத்த அழுத்தத்துக்கான மருந்துகளும், 2,768 பேருக்கு இரண்டு நோய்களுக்கான மருந்துகளும் கொடுக்கப்பட்டுள்ளன.
நீண்ட நாள்கள் சிகிச்சையில் இருக்கும், 426 பேருக்கு மருந்துகள் கொடுக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர, 454 போ் பிசியோதெரபி சிகிச்சையும், 11 பேருக்கு டயாலிசிஸ் சிகிச்சை பெற்றுள்ளனா்.
அதன்படி, 13,247 போ் இரண்டு நாள்களில் பயனடைந்துள்ளனா். இந்தத் திட்டத்தில், இந்தாண்டு இறுதிக்குள் 1 கோடி போ் பயனடைவா் என்றாா் அவா்.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எம்.எல்.ஏ. உதயநிதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.