கீழமை நீதிமன்ற நீதிபதிகளின் பாதுகாப்பு குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா சமீபத்தில் கவலை தெரிவத்திருந்த நிலையில், ஆந்திர உயர் நீதிமன்ற நீதிபதிகள் குறித்து அவதாறு கருத்து தெரிவித்த இருவரை சிபிஐ கைது செய்துள்ளனர்.
நீதிபதிகள் குறித்து அவதாறு கருத்து தெரிவித்த வழக்கில் மொத்தமாக ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சமூகவலைதளங்களில் நீதிபதிகள், நீதித்துறைக்கு எதிராக உள்நோக்கத்துடன் சிலர் அவதாறு கருத்து தெரிவித்துள்ளதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | ராகுல் காந்தியின் ட்விட்டர் பக்கம் நிறுத்தப்பட்டதற்கு காரணம் என்ன?
இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து, முதல் தகவல் அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்ட 16 பேரில் 13 பேரின் வசிப்பிடங்களை சிபிஐ கண்டறிந்துள்ளது. அதில், மூவர் வெளிநாட்டில் இருப்பது தெரியவந்துள்ளது. 13 பேரில் 11 பேரிடம் சிபிஐ விசாரணை நடத்தி ஐவரை கைது செய்துள்ளது.
குற்றம்சாட்டப்பட்டவர்களின் வீடுகளில் சோதனை நடத்தி பல ஆவணங்களை சிபிஐ கைப்பற்றியுள்ளது. ஜார்க்கண்ட் நீதிபதி கொலை வழக்கு விசாரணையின்போது, நீதிபதிகளுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல் சம்பவங்களில் புலனாய்வு அமைப்புகள் தகுந்த நடவடிக்கைகள் எடுப்பதில்லை என என்.வி. ரமணா தெரிவித்திருந்தார்.