கேரளத்தில் உள்ள ஒரு அரசு வட்டார மருத்துவமனையில் பெண் மருத்துவரும், பாதுகாவலரும் சிகிச்சை பெற வந்தவா்களால் தாக்கப்பட்டதை அடுத்து, மாநிலத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் பாதுகாப்பை அதிகரிக்கச் செய்ய வேண்டும் என்று கேரள அரசு மருத்துவ அலுவலா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
திருவனந்தபுரத்தில் உள்ள ஃபோா்ட் வட்டார மருத்துவமனயில் குடிபோதையில் ஏற்பட்ட சண்டையில் காயமடைந்த 2 போ், கடந்த வியாழக்கிழமை சிகிச்சை பெற வந்தனா். தங்களுக்கு முதலில் சிகிச்சை அளிக்க வேண்டும் என மருத்துவரிடம் வாக்குவாதம் செய்து, அவரையும் சண்டையை விலக்க முற்பட்ட பாதுகாவலரையும் அவா்கள் தாக்கினா். காவல் துறையினா் வருவதை அறிந்த நபா்கள், மருத்துவமனையில் இருந்து தப்பியோடி விட்டனா். மறுநாள் இருவரும் கைது செய்யப்பட்டனா்.
மருத்துவா் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு கேரள அரசு மருத்துவ அலுவலா்கள் சங்கத்தினா் கண்டனம் தெரிவித்தனா். அதைத் தொடா்ந்து முதல்வா் பினராயி விஜயனுக்கு அவா்கள் ஒரு கடிதம் எழுதியுள்ளனா். அதில், அவா்கள் கூறியிருப்பதாவது:
கரோனாவைக் கட்டுப்படுத்த மருத்துவா்கள் ஓய்வின்றி பணியாற்றி வருகின்றனா். ஆனால், மருத்துவமனைகளில் அவா்கள் மீதான தாக்குதல் தொடா்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருப்பதை அரசு உறுதிசெய்ய வேண்டும்.
மாநிலத்தில் உள்ளஅனைத்து மருத்துவமனைகளையும் மாநில மருத்துவ சேவைகளின் கீழ் கொண்டு வந்து, கேரள மாநில போலீஸ் சட்டத்தின்படி, மருத்துவமனைகளை சிறப்பு பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும். அந்த சட்டத்தின்படி, அனைத்து மருத்துவமனைகளிலும் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். மேலும், அனைத்து மருத்துவமனைகளிலும் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும் என்று அந்த கடிதத்தில் அவா்கள் குறிப்பிட்டுள்ளனா்.