நிகழ்வாண்டில் இந்திய - சீன எல்லை வழியாக யாரும் ஊடுருவவில்லை என மாநிலங்களவையில் திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 19 முதல் நடைபெற்று வருகின்றன. இந்த கூட்டத்தில் எல்லைகளில் ஊடுருவல் குறித்த உறுப்பினரின் கேள்விக்கு மத்திய அமைச்சர் அஜய் பட் பதிலளித்துள்ளார்.
“மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் பாதுகாப்புப் படை அளித்த தகவலின்படி, 2021ஆம் ஆண்டில், இந்திய - பாகிஸ்தான் எல்லை வழியாக 33 முறை ஊடுருவல் முயற்சி நடைபெற்றது. அதில் 11 பேர் கொல்லப்பட்டனர். 20 பேர் கைது செய்யப்பட்டனர்.
அதேபோல், இந்திய - வங்கதேசம் எல்லை வழியாக 441 முறை ஊடுருவல் முயற்சி நடைபெற்றது. அதில் ஒருவர் கொல்லப்பட்டார். 740 பேர் கைது செய்யப்பட்டனர். இந்திய - நேபாளம் வழியாக 11 பேர் ஊடுருவ முயற்சித்தனர்.
மேலும், இந்திய - சீன எல்லை வழியாக யாரும் ஊடுருவ முயற்சிக்கவில்லை. இந்திய - மியான்மர் எல்லை வழியாக ஊடுருவ முயன்ற 8486 அகதிகளில், 5796 பேர் திருப்பி அனுப்பப்பட்டனர். 2690 பேர் இன்னும் இந்தியாவில் உள்ளனர்.”