காஷ்மீரிக்களின் பழக்க வழக்கங்கள் சிந்தனை ஓட்டம் ஆகியவை தன்னிடமும் உள்ளது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதற்கு பிறகு முதல்முறையாக, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று (செவ்வாய்கிழமை) ஸ்ரீ நகர் சென்றுள்ளார்.
ஸ்ரீ நகரில் புதிய கட்சி அலுவலகத்தை திறந்து வைத்த பின்னர் பேசிய ராகுல் காந்தி, மத்திய அரசு கடுமையாக சாடினார். இதுகுறித்து அவர் கூறுகையில், "ஜம்மு காஷ்மீர், பெகாஸஸ் விவகாரம் குறித்து பேச முயற்சித்த போதெல்லாம், எதிர்க்கட்சிகளின் குரல் நசுக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் மீது நேரடியாக தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. நாட்டின் மற்ற பகுதிகளில் மறைமுகமாக தாக்குதல் நடத்தப்பட்டுவருகிறது. நீதித்துறை, நாடாளுமன்றம் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளின் மீதும் தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது. ஊடகங்களில் உண்மை பிரதிபலிப்பதில்லை. அவர்களே அச்சுறுத்தலுக்குள்ளாகின்றனர். பயப்படுகின்றனர்.
உண்மையான செய்திகளை வெளியிட்டால் தங்கள் பணி பறிக்கப்பட்டுவிடுமோ என அச்சப்படுகின்றனர். ஊடகம் தனது பணியை செய்தவதில்லை. என்னால் உங்களை புரிந்து கொள்ள முடிகிறது. எனது குடும்பமும் காஷ்மீரி்ல்தான் வாழ்ந்தது. காஷ்மீரிக்களின் பழக்க வழக்கங்கள் சிந்தனை ஓட்டம் ஆகியவை எனக்குள்ளும் உள்ளது" என்றார்.