பெகாஸஸ் விவகாரத்தில் நீதித்துறையில் நம்பிக்கை வைக்க வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் விவாதம் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் மனுதாரர்களை கேட்டு கொண்டுள்ளது.
பெகாஸஸ் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை மேற்கொள்ளக் கோரி பல்வேறு தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை இன்று (செவ்வாய்கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு, பெகாஸஸ் விவகாரத்தில் நீதித்துறையில் நம்பிக்கை வைக்க வேண்டும் என தெரிவித்தது.
இதுகுறித்து என்.வி. ரமணா மேலும் கூறுகையில், "உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துவிட்டு நீங்கள் ஏன் பிற தளங்களில் இதுகுறித்து விவாதம் மேற்கொள்ள வேண்டும்? ஊடகத்தில் நீங்கள் கூறும் கருத்துகள், உங்களின் சந்தேகங்கள் குறித்து நீதிமன்றத்தில் முறையாக விசாரணை நடத்தப்பட வேண்டும்.
இதையும் படிக்க | ஜந்தர் மந்தரில் இஸ்லாமியர்களுக்கு கொலை மிரட்டல்: பாஜக பிரமுகர் கைது
பொதுவெளியில் விவாதம் நடத்தப்பட கூடாது என நாங்கள் கூறவில்லை. ஆனால், இவ்வழக்கு நீதிமன்றத்தில் உள்ளபோது, இங்குதான் விசாரணை நடத்தப்பட வேண்டும்" என்றார்.
மத்திய அரசின் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, பெகாஸஸ் விவகாரம் குறித்த மனுக்களை படித்து பதில் அளிப்பதற்கு கால அவகாசம் கேட்டு கோரிக்கை விடுத்தார். இதை ஏற்று கொண்ட நீதிமன்றம், வழக்கின் விசாரணையை திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.