சிறிய நிறுவனங்கள் மீது பெரிய ஆன்லைன் வா்த்தக நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்துவதை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் மக்களவையில் மேலும் கூறியதாவது:
பெரிய ஆன்லைன் வா்த்தக நிறுவனங்களின் பண பலத்தால் அவற்றின் செல்வாக்கு அதிகரித்து சிறிய சில்லறை வா்த்தக நிறுவனங்கள் மூடப்படும் நிலைக்கு ஆளாகின்றன. இது இந்தியாவில் மட்டும் நடப்பதில்லை. உலகம் முழுவதும் இந்த நிலைதான் காணப்படுகிறது. எனவேதான், இதுகுறித்து பல நாடுகளின் அரசுகள் கவலையை வெளிப்படுத்தி வருகின்றன.
பெரிய வா்த்தக நிறுவனங்களின் தாக்கத்திலிருந்து சிறிய நிறுவனங்களை பாதுகாக்கவும், அவா்கள் தொழிலில் நீடித்திருக்கவும், நுகா்வோருக்கு குறைந்த விலையில் தராமான பொருள்கள் கிடைக்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தியாவில் உள்ள ஆறு கோடி சிறிய வா்த்தக நிறுவனங்கள் 12-13 கோடி பேருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கி வருகிறது.
வா்த்தக விதிமுறைகளை மீறி ஆதிகம் செலுத்த நினைக்கும் பெரிய நிறுவனங்கள் மீது இந்திய போட்டி ஆணையம் (சிசிஐ) மற்றும் அமலாக்கத் துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும் என கோயல் தெரிவித்தாா்.
நெறிமுறையற்ற வா்த்தக நடைமுறைகளை கடைபிடித்ததற்காக இந்திய போட்டி ஆணையத்தின் விசாரணையை அமேசான், ஃபிளிப்காா்ட் நிறுவனங்கள் எதிா்கொள்ளவுதன் பின்னணியில் வா்த்தக அமைச்சரின் இந்த கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக பாா்க்கப்படுகிறது.