அமேசான், ஃபிளிப்கார்ட் நிறுவனங்களின் மனு தள்ளுபடி: பியூஷ் கோயல் வரவேற்பு

அமேசான், ஃபிளிப்கார்ட் நிறுவனங்கள் சிசிஐ விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்ததற்கு மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சிசிஐ விசாரணைக்கு அனுமதியளிக்கப்பட்டதை எதிர்த்து அமேசான், ஃபிளிப்கார்ட் நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்க மறுத்த நிலையில், மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.

அமேசான், மற்றும் ஃபிளிப்கார்ட் நிறுவனங்கள், இந்திய தொழில் போட்டி ஆணையத்தின் விசாரணையை  எதிர்கொள்ள வேண்டும் என உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்ற மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல், இரு நிறுவனங்களின் வர்த்தக நடவடிக்கைகள் கண்காணிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

அமேசான், ஃபிளிப்கார்ட் நிறுவனங்கள் வா்த்தக நடவடிக்கைகளில் இந்தியாவின் தொழில்போட்டிக்கான சட்டங்களை மீறி செயல்படுவதாக தொடர் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுவந்தது. இதன் காரணமாக, அமெரிக்காவை தலைமையகமாக கொண்டு இயங்கும் இவ்விரண்டு நிறுவனங்களின் மீதும் மத்திய அரசு அதிருப்தியில் இருந்துவந்தது. 

இதையடுத்து, நாடாளுமன்றத்தில் இத்தீர்ப்பை வரவேற்று பேசிய கோயல், "விசாரணையை தடுக்க இந்நிறுவனங்கள் சட்ட ரீதியான தந்திரங்களை மேற்கொண்டுவருகிறது. வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கப்பட்ட அதே நாளில் இந்நிறுவனங்கள் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வி அடைந்திருப்பதை மகிழ்ச்சியாக தெரிவித்து கொள்கிறேன். 

அமேசான், ஃபிளிப்கார்ட் நிறுவனங்கள் மோசடியான, நியாயமற்ற வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுகிறதா என்பதை விசாரிக்க இந்திய தொழில் போட்டி ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியள்ளது" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com