நாடாளுமன்ற அவைகளில் எதிர்க்கட்சிகளை பேசவிடாதது ஜனநாயக படுகொலை என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
நாடாளுமன்ற கூட்டத்தை முன்கூட்டியே முடித்தது, பெகாஸஸ் விவகாரம், வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி ராகுல் காந்தி தலைமையில் நாடாளுமன்ற வளாகத்திலிருந்து அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களும் விஜய் சவுக் வரை இன்று பேரணியாக சென்றனர்.
பேரணியின்போது ராகுல் காந்தி பேசியதாவது,
எங்களை நாடாளுமன்றத்தில் பேச அனுமதிக்காததால் உங்கள்(ஊடகம்) முன்பு பேசுகிறோம். இது ஜனநாயக படுகொலை. நாடு முழுவதும் உள்ள 60 சதவீதத்தினரின் குரல் நசுக்கப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சிகள் பேரணி
மேலும், நாடாளுமன்ற முடக்கத்திற்கு பாஜக தான் காரணம் என பேரணியில் பங்கேற்ற திமுக மாநிலங்களவை தலைவர் திருச்சி சிவா விமர்சித்துள்ளார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஜூலை 19 முதல் ஆகஸ்ட் 13 வரை நடத்த திட்டமிடப்பட்டன. இந்நிலையில், கூட்டம் தொடங்கிய முதல் நாளிலிருந்தே பெகாஸஸ், வேளாண் சட்டம், பெட்ரோல் விலை குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வந்தனர்.
கூட்டத்தொடர் நிறைவடைய 2 நாள்கள் மீதம் இருந்த நிலையில், நேற்று(ஆக.11) காலையுடன் மக்களவையும், மாலையுடன் மாநிலங்களவையும் முடித்துக் கொள்ளப்பட்டன.