மாநிலங்களவை 28 மணிநேரமும், மக்களவை 21 மணிநேரமும் மட்டுமே செயல்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஜூலை 19 முதல் ஆகஸ்ட் 13 வரை நடத்த திட்டமிடப்பட்டன. இந்நிலையில், கூட்டம் தொடங்கிய முதல் நாளிலிருந்தே பெகாஸஸ், வேளாண் சட்டம், பெட்ரோல் விலை குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வந்தனர்.
எதிர்க்கட்சிகளின் அமளியால் கூட்டத்தொடர் நடைபெற்ற 17 நாள்களும் அவைகள் ஒத்திவைக்கப்பட்டன. இருப்பினும், அமளிக்கு மத்தியில் மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டு வந்தன.
இந்நிலையில், கூட்டத்தொடர் நிறைவடைய 2 நாள்கள் மீதம் இருந்த நிலையில், நேற்று(ஆக.11) காலையுடன் மக்களவையும், மாலையுடன் மாநிலங்களவையும் முடித்துக் கொள்ளப்பட்டன.
மக்களவை
மக்களவை கூட்டத்தொடர் மொத்தம் 96 மணிநேரம் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், 21 மணிநேரம் 14 நிமிடங்கள் மட்டுமே செயல்பட்டன. மீதமுள்ள 74 மணிநேரம் 46 நிமிடங்கள் வீணாகியுள்ளன.
மொத்தம் 22 சதவீத அலுவலக பணிகள் நடைபெற்ற நிலையில், 20 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், ஓபிசி மசோதா மட்டுமே அனைத்து கட்சிகளின் பங்கேற்புடன் விவாதம் நடத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டன.
மாநிலங்களவை
மாநிலங்களவை கூட்டத்தொடர் மொத்தம் 102 மணிநேரம் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், 28 மணிநேரம் 21 நிமிடங்கள் மட்டுமே செயல்பட்டன. மீதமுள்ள 75 மணிநேரம் 39 நிமிடங்கள் வீணாகியுள்ளன.
மொத்தம் 28 சதவீத அலுவலக பணிகள் நடைபெற்ற நிலையில், 19 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், ஓபிசி மசோதா மட்டுமே அனைத்து கட்சிகளின் பங்கேற்புடன் விவாதம் நடத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டன.