ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இது தொடா்பாக ராணுவ செய்தித் தொடா்பாளா் வியாழக்கிழமை கூறுகையில், ‘‘தேசிய நெடுஞ்சாலையில் ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு எல்லைப் பாதுகாப்புப் படையினரின் வாகனம் சென்று கொண்டிருந்தது. காஸிகுண்ட் அருகே மல்போரா பகுதியில் வாகனம் சென்று கொண்டிருந்தபோது அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள் வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினா்.
அப்போது எல்லைப் பாதுகாப்புப் படையினா் பதில் தாக்குதல் நடத்தினா். இதையடுத்து, பயங்கரவாதிகள் தப்பியோடினா். இந்த மோதலில் வீரா்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அப்பகுதியில் பயங்கரவாதிகளைத் தேடும் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. ராணுவ அதிகாரிகள், காவல் துறை உயரதிகாரிகள் உள்ளிட்டோா் தாக்குதல் நிகழ்ந்த இடத்தை நேரில் பாா்வையிட்டனா்’’ என்றாா்.
ஆயுதங்கள் மீட்பு:
ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதி அருகே ஹஜிதாரா டாட் என்ற பகுதியில் பாதுகாப்புப் படையினா் தேடுதல் வேட்டை நடத்தினா். அப்போது, பயங்கரவாதிகள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்கள், வெடிபொருள்கள், போதைப் பொருள்கள் உள்ளிட்டவற்றைப் பாதுகாப்புப் படையினா் கைப்பற்றினா்.
15 கையெறி குண்டுகள், 5 துப்பாக்கிகள், 150 தோட்டாக்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இந்த விவகாரம் தொடா்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்றும் அவா்கள் தெரிவித்தனா்.