கடல் உணவு பொருட்களின் ஏற்றுமதியை பெரியளவில் உயர்த்துவதற்கு தேவையான கொள்கை ரீதியான அனைத்து ஆதரவையும் மத்திய அரசு வழங்கும் என்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற கடல் உணவு ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் கூட்டத்தில் பேசிய அவர், “கடல்சார் பொருட்களின் ஏற்றுமதிகளை பாதிக்கும் பிரச்னைகளை தீர்க்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம். 2014-15 முதல் 2018-19 வரை சராசரியாக 10.2% வருடாந்திர வளர்ச்சி விகிதத்துடன் இந்தியாவில் மீன்வளத் துறை வியக்கத்தக்க வளர்ச்சியைக் எட்டியுள்ளது.
“2019-20-ம் ஆண்டில் இந்தியாவில் மீன் உற்பத்தி வரலாறு காணாத அளவில் 141.56 லட்சம் மெட்ரிக் டன்களாக இருந்தது. சர்வதேச அளவில் இந்திய மீன் உற்பத்தி சுமார் 8% ஆக உள்ளது மற்றும் மீன் வளர்ப்பில் இந்தியா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. கரோனா பெருந்தொற்று மற்ற பல துறைகளைப் போலவே கடல் உணவு துறையையும் பாதித்துள்ளது.
இருந்தபோதிலும் நமது கடல் பொருட்கள் ஏற்றுமதி மீண்டு வருவதாகவும், இந்த ஆண்டு இன்னும் சிறப்பாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். பிரதமர், மீனவர்கள் தொடர்பான பிரச்னைகள் குறித்து அக்கறை கொண்டுள்ளார். இந்திய கடல் மீன்வள மசோதா 2021-ஐ அரசு அறிமுகப்படுத்தவுள்ளது. அனைத்து பிரச்னைகளையும் நாங்கள் கருத்தில் கொள்வோம், தேவையான தீர்வுகளை அரசு அளிக்கும் என்றார்.