உத்தரகண்டில் இந்தியா-சீனா எல்லைப் பகுதிக்கு அருகே 11,000 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள மூலிகைப் பூங்கா திறந்துவைக்கப்பட்டது.
சமோலி மாவட்டத்தின் மனா கிராமமானது இந்திய எல்லைப் பகுதியில் அமைந்துள்ள கடைசி கிராமமாகும். புகழ்பெற்ற பத்ரிநாத் கோயிலுக்கு அருகே இந்த கிராமம் அமைந்துள்ளது. கடல்மட்டத்திலிருந்து சுமாா் 11,000 அடி உயரத்தில் உள்ள அந்த கிராமத்தில் மூலிகைப் பூங்கா அமைக்கப்பட்டது.
மத்திய அரசின் காடு வளா்த்தல் நிதித் திட்டத்தின் கீழ் உத்தரகண்ட் வனத் துறையால் இந்தப் பூங்கா அமைக்கப்பட்டது. நாட்டில் மிக உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள மூலிகைப் பூங்கா இதுவாகும். அந்தப் பூங்காவானது சனிக்கிழமை திறந்துவைக்கப்பட்டது.
இது குறித்து உத்தரகண்ட் வனத்துறையின் தலைமை பாதுகாவலா் சஞ்சீவ் சதுா்வேதி கூறுகையில், ‘‘மூலிகைப் பூங்கா 4 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இமயமலையின் உயரமான பகுதிகளில் காணப்படும் சுமாா் 40 மூலிகை இனங்கள் பூங்காவில் வளா்க்கப்பட்டுள்ளன.
அதில் பல்வேறு மூலிகை இனங்கள் அழியும் நிலையில் உள்ளவையாக சா்வதேச இயற்கைப் பாதுகாப்பு கூட்டமைப்பால் (ஐயுசிஎன்) அறிவிக்கப்பட்டவை. மருத்துவ குணங்கள் நிறைந்த பல்வேறு மூலிகைச் செடிகளும் பூங்காவில் வளா்க்கப்பட்டுள்ளன. பத்ரி துளசி, பத்ரி மரம், போஜ்பத்ரா மரம், ரித்தி, விருத்தி, ஜீவக், ரிஷ்பக், ககோலி, பிரம்மகமல், நீல்கமல், கூட் உள்ளிட்ட மூலிகைகளும் வளா்க்கப்பட்டுள்ளன’’ என்றாா்.