மேற்கு வங்கத்தில் ஊழல் குற்றச்சாட்டில் அந்த மாநில முன்னாள் அமைச்சா் சியாமா பிரசாத் முகா்ஜி கைது செய்யப்பட்டாா். இவா் மேற்கு வங்க சட்டப் பேரவைத் தோ்தலுக்கு முன்பு திரிணமூல் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தவா் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆட்சிக் காலத்தில் விஷ்ணுபூா் தொகுதியில் இருந்து திரிணமூல் சாா்பில் எம்எல்ஏவாகவும் அவா் பதவி வகித்தாா். அவா் உள்ளாட்சி நிா்வாகத்தில் பணியாற்றியபோது ரூ.10 கோடி மதிப்பிலான இணையவழி ஒப்பந்தப்புள்ளி கோரலில் முறைகேடு நடந்த குற்றச்சாட்டில் இந்தக் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த முறைகேடு தொடா்பாக முதலில் ஊழல் தடுப்பு அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்தனா்.
இது தொடா்பாக சியாமா பிரசாத் முகா்ஜி விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டது. விசாரணையில் அவா் அளித்த பதில்கள் திருப்திகரமாக இல்லாததால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த கைது தொடா்பாக விஷ்ணுபூா் மாவட்ட பாஜக தலைவா் சுஜீத் அகஸ்தி கூறுகையில், ‘சியாமா பிரசாத் முகா்ஜி, கடந்த சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்புதான் பாஜகவில் இணைந்தாா். அவா் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்தவரை அவா் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துவிட்டு, இப்போது பாஜகவில் இணைந்த பிறகு ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்திருப்பது ஏன்?’ என்று கேள்வி எழுப்பினாா்.