நாட்டின் வளங்களை விற்று காங்கிரஸ் லஞ்சம் வாங்கியதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டியுள்ளார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட தேசிய பணமாக்கும் திட்டம் குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடுமையான விமரிசனங்களை முன்வைத்திருந்தார். இதற்கு பதிலடி அளித்துள்ள நிர்மலா சீதாராமன், பணமாக்கும் திட்டம் என்றால் என்ன? என்ற புரிதல் ராகுல் காந்தியிடம் உள்ளதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
நாட்டின் வளங்களை விற்று காங்கிரஸ் லஞ்சம் வாங்கியதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். தேசிய பணமாக்கும் திட்டம் மூலம் 25 விமான நிலையங்கள், 40 ரயில் நிலையங்கள், 15 ரயில்வே ஸ்டேடியங்கள் உள்ளிட்டவற்றில் தனியார் நிறுவனங்கள் முதலீடு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது.
தேசிய பணமாக்கும் திட்டத்தை கடுமையாக விமரிசித்துள்ள ராகுல் காந்தி, "70 ஆண்டுகளாக பொது மக்களின் பணத்தால் கட்டியெழுப்பப்பட்ட நாட்டின் மகுடங்களாக திகழும் ஆபரணங்களை பிரதமர் மோடி தனது தொழிலதிபர் நண்பர்களுக்கு விற்க இத்திட்டம் உதவி புரிந்துள்ளது.
இதையும் படிக்க | உத்தரப் பிரதேசம் : விவசாயிகள் போராட்டத்தால் 40 ரயில்கள் ரத்து
சுதந்திரத்திற்கு பிறகு, காங்கிரஸ் ஆட்சியில் வளர்ச்சி இல்லை என பாஜக குற்றம்சாட்டுகிறது. ஆனால், தனியார் மயமாக்கப்படும் பட்டிலில் இருப்பவை யாவும் காங்கிரஸ் ஆட்சியில் உருவாக்கப்பட்ட சொத்துக்கள்தான். தவறான பொருளாதார கொள்கையை மறைப்பதற்காக சொத்துகளை விற்க பாஜக முயல்கிறது" என்றார்.
தேசிய பணமாக்கும் திட்டத்திற்கு திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.