மும்பை விமான நிலையத்தில் நடிகர் சல்மான் கானை தடுத்து நிறுத்திய சிஐஎஸ்எப் வீரருக்கு வெகுமதி அளிக்கப்பட்டதாக மத்திய தொழிற்சாலை காவல் படை தெரிவித்துள்ளது.
நடிகர் சல்மான் கான், நடிகை கத்ரீனா கைஃப் ஆகியோர் இணைந்து நடித்துவரும் படம் 'டைகர் 3'. இத்திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக ரஷ்யா செல்வதற்கு இவர்கள் இருவரும் மும்பை விமான நிலையத்திற்கு கடந்த வியாழக்கிழமை சென்றிருந்தனர். அப்போது, முனையத்திற்குள் நுழைய முயற்சித்த சல்மான் கானை பாதுகாப்பு காரணங்களை காரணம் காட்டி மத்திய தொழிற்சாலை காவல் படை வீரர் நிறுத்தியுள்ளார்.
மேலும், பாதுகாப்பு சோதனைச் சாவடியிலிருந்து ஒப்புதல் வாங்கிவரும்படி அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்த விடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலானது. இதையடுத்து, அந்த சிஐஎஸ்எப் அலுவலருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டதாக செய்தி வெளியானது.
இந்நிலையில், இச்செய்தியை மறுத்துள்ள சிஐஎஸ்எப், "சிஐஎஸ்எப் அலுவலருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பதிவிடப்பட்ட ட்விட்டர் பதிவில் உண்மை இல்லை. தகுந்த ஆதாரங்கள் இல்லை. உண்மையாக, கடமையை நிறைவேற்றுவதில் முன்மாதிரியாக செயல்பட்ட அவருக்கு வெகுமதி அளிக்கப்பட்டுள்ளது" என ட்வீட் செய்துள்ளது.
இதையும் படிக்க | உத்தரப் பிரதேசம் : விவசாயிகள் போராட்டத்தால் 40 ரயில்கள் ரத்து