இந்தியாவில் இருந்து பயணம் செய்வோா், பயணத்தை நிறைவுசெய்த பிறகு நுழைவு இசைவு பெறும் வசதியை (விசா ஆன் அரைவல்) ஐக்கிய அரபு அமீரகம் தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.
கரோனா தொற்று பரவல் காரணமாக, விமானப் போக்குவரத்துக்கான விதிமுறைகளை ஐக்கிய அரபு அமீரகம் தொடா்ந்து மாற்றியமைத்து வருகிறது. இந்நிலையில், அந்நாட்டின் எடிஹாட் விமான நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ‘இந்தியாவில் இருந்து பயணிப்பவா்களுக்கும் அந்நாட்டில் கடந்த 14 நாள்கள் வசித்தவா்களுக்கும் விசா ஆன் அரைவல் வசதியைத் தற்காலிகமாக நிறுத்திவைப்பதற்கு அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனா்.
விமானப் போக்குவரத்து தொடா்பான மாற்றியமைக்கப்பட்ட விதிமுறைகளை வலைதளத்தின் மூலமாகப் பயணிகள் அறிந்து கொள்ளலாம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவைச் சோ்ந்த பயணி ஒருவா், அபுதாபிக்குச் சென்று விசா ஆன் அரைவல் வசதியைப் பயன்படுத்தி தனிமைப்படுத்திக் கொள்ளும் விதிமுறைகளுக்கு உள்படாமல் துபை செல்ல முடியுமா என்று சுட்டுரையில் கேள்வி எழுப்பியிருந்தாா். அதற்குப் பதிலளிக்கும் வகையில் எடிஹாட் நிறுவனம் மேற்கண்ட தகவலை வெளியிட்டுள்ளது.
அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய நாடுகள் வழங்கிய நுழைவுஇசைவைப் பயன்படுத்தி பயணம் மேற்கொள்ளும் பயணிகளும் விசா ஆன் அரைவல் வசதியைப் பயன்படுத்த முடியாது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாட்டில் கரோனா தொற்றின் 2-ஆவது அலை பரவல் தீவிரமடைந்ததையடுத்து, இந்தியாவுடனான விமானப் போக்குவரத்தை ஐக்கிய அரபு அமீரகம் நிறுத்திக் கொண்டது. கடந்த 5-ஆம் தேதி முதல் இரு நாடுகளுக்கிடையேயான விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.