நாட்டில் விளையாட்டு வீரர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் உறுதியளித்துள்ளார்.
20 வயதுக்குட்பட்டோருக்கான உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்ற வீரர், வீராங்கனைகளுடன் அமைச்சர் அனுராக் தாக்குர் கலந்துரையாடினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, 20 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் நமது வீரர்கள் சிறப்பான பங்களிப்பை அளித்தனர்.
அமித் கத்ரி, ஷாலி சிங் ஆகியோர் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளனர். நீளம் தாண்டுதல் போட்டியில் ஒரு சென்டி மீட்டர் இடைவெளியில் ஷாலி தங்கப் பதக்கத்தை தவறவிட்டார். இந்திய வீரர்களாலும் விளையாட்டில் சாதிக்க இயலும் என்பதை இது காட்டியுள்ளது.
விளையாட்டு வீரர்களுடன் கலந்துரையாடினேன். அவர்களுக்கு செய்து கொடுக்கப்பட்ட வசதிகள் குறித்து கேட்டறிந்தேன். விளையாட்டு வீரர்களின் கோரிக்கைகளை கேட்டு அதனை நிறைவேற்றும் பணிகளை அரசு செய்யும். ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் சிறப்பான பங்களிப்பை அவர்கள் அளிக்க வேண்டும் என்று கூறினார்.