இந்தியாவில் தடுப்பூசி விநியோகத்தில் சாதனை
50 சதவிகிதத்திற்கு மேலான வயது வந்தோருக்கு குறைந்தபட்சம் ஒரு தவணை தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனைப் படைத்துள்ளது.
கரோனா மூன்றாம் அலையை தவிர்க்கும் வகையில் தடுப்பூசி விநியோகம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், 50 சதவிகிதத்திற்கு மேலான வயது வந்தோருக்கு குறைந்தபட்சம் ஒரு தவணை தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனைப் படைத்துள்ளது. இந்தாண்டின் ஆரம்பத்தில் தடுப்பூசி விநியோகம் தொடங்கப்பட்டதிலிருந்து கிட்டத்தட்ட 61 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா ட்விட்டர் பக்கத்தில், "முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்தியா பெரிய மைல்கல்லை படைத்துள்ளது.
அனுமதிக்கப்பட்டவர்களில் 50 சதவிகிதத்திற்கு மேலானவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இந்தியா இதை தொடர வேண்டும்
கரோனாவுக்கு எதிராக போரிட வேண்டும்
இதன்மூலம் குறிப்பிடத்தக்க மக்கள் கரோனாவுக்கு எதிரான பாதுகாப்பை பெற்றுள்ளனர்" என பதிவிட்டுள்ளார்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், கிட்டத்தட்ட 80 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதன் மூலம் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 61 கோடியை தாண்டியுள்ளது.