மைசூரு பாலியல் வழக்கில் கர்நாடக உள்துறை அமைச்சர் தெரிவித்த கருத்து சர்ச்சையைக் கிளப்பிய நிலையில் அவர் தனது கருத்தைத் திரும்பப் பெறுவதாக தெரிவித்துள்ளார்.
மைசூரைச் சோ்ந்த கல்லூரி மாணவி ஒருவா், செவ்வாய்க்கிழமை ஹாலனஹள்ளி காவல் சரகத்துக்குள்பட்ட லலிதாபுரா மலைக் குன்று பகுதியில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் கர்நாடகத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக வியாழக்கிழமை கருத்து தெரிவித்த கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் அரகா ஞானேந்திரா “பாலியல் வன்கொடுமை தொலைதூரத்தில் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் நடந்துள்ளது. இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண் அங்கு சென்றிருக்கக்கூடாது. அது ஒரு வெறிச்சோடிய இடம். மாலை நேரத்தில் அவர் அங்கு சென்றிருக்கக் கூடாது. இந்த விவகாரத்தில் காங்கிரஸ் என்னை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சிக்கிறது” எனக் குறிப்பிட்டு பேசினார்.
இதையும் படிக்க | புதிய வசதியுடன் வெளிவரும் ஆப்பிள் 'ஐபோன் 13' ஸ்மார்ட்போன்
அமைச்சரின் இந்தக் கருத்துக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. மாநில முதல்வர் பசவராஜ் பொம்மையும் அமைச்சரின் கருத்தை ஏற்கவில்லை எனத் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக பலத்த எதிர்ப்பு கிளம்பியதையடுத்து உள்துறை அமைச்சர் தனது கருத்தை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளார்.
இதையும் படிக்க | காபூல் குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 95ஆக உயர்வு
“யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் கருத்து தெரிவிக்கவில்லை எனத் தெரிவித்த அரகா ஞானேந்திரா காங்கிரஸ் கட்சியினர் தொடர்பாக தெரிவித்த கருத்தை திரும்பப் பெறுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.