கேரளத்தில் கரோனா தொற்று அதிகரிப்பதன் காரணமாக இன்று(ஞாயிற்றுக்கிழமை) அங்கு முழு ஊரடங்கு அமலில் உள்ளது.
கேரள மாநிலத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நாட்டின் பிற பகுதிகளைக் காட்டிலும் கேரளத்தில் கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
இந்நிலையில், மாநிலத்தில் கரோனா பாதிப்பு நிலவரம் மற்றும் எடுக்கப்பட வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் தொடா்பாக முதல்வா் பினராயி விஜயன் தலைமையில் சனிக்கிழமை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. ஆய்வுக் கூட்டத்துக்குப் பிறகு நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் முதல்வா் கூறியதாவது:
நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக ஆகஸ்ட் 30 ஆம் தேதியில் இருந்து இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர ஞாயிற்றுக்கிழமையும் (ஆக.29) இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும். அதற்கான அறிவிப்பு ஏற்கெனவே வெளியிடப்பட்டுவிட்டது. மேலும், கரோனா வார பாதிப்பு விகிதம் 7 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ள பகுதிகளில் பொதுமுடக்கத்தை நடைமுறைப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது என்றார்.
கேரளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 31,265 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.